Tuesday, February 20, 2007

மீண்டுமொரு பேரழிவுக்கு உலகம் தயாராகிறதா ??

இன்னொரு ஊழிக்கு தயாராகிறதா பூமி?

தயவு செய்து முழுமையாக வாசியுங்கள்.

மலட்டுக்கோள்களுக்கு நடுவே பெறுவதற்கரிய மக்கட்பேற்றைப் பெற்றிருக்கும் ஒரே கிரகம் நமது பூமித்தாய் மாத்திரம்தான். ஆனால் தன் மடி நிறைய உயிரினங்களைத் தாலாட்டும் பூமி இப்போது தனது உயிர்வளத்தைக் காவு கொடுக்கும் கால ஊழிக்குள் வேகமாக பிரவேசிக்க தொடங்கியுள்ளாள். என்று உயிரியலாளர்கள் சமீபகாலமாகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பூமி தன் மீது உயிர்ப்பசையைப் பூசி ஏறத்தாழ 3.5 பில்லியன் வருடங்கள் ஆகின்றன. இந்த நீண்ட உயிர்வரலாற்றில் இது வரையில் பூமி ஆறு பேரழிவுகளை சந்தித்திருக்கின்றது. இதில் கடைசியாக நிகழ்ந்த ,இப்போதும் அதிகம் பேசப்படும் ஊழித்தாண்டவம் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னாள் அரங்கேறியது. கிறித்தேசியஸ் யுகத்தின் (Cretaceous Era) கடைசிக் காலத்தில் நிகழ்ந்த இந்தப் பிரளயத்தின் போதே அன்று பூமியில் இராஜங்கம் நடத்தி வந்த டைனோசர் இனங்கள் அடியோடு அழிந்தன. அண்ட வெளியில் இருந்து வந்த இராட்சத விண்கற்கள் பூமியை மோதி வெடித்ததால் கிளம்பிய தூசி மண்டலம் சூரியனை மறைத்ததில் சக்திப்பாய்ச்சல் தடைப்பட்டு ...பூமி குளிர்ந்து...இனங்கள் இனங்களாகப் பெரும் எண்ணிக்கையில் தாவரங்களும் விலங்குகளும் செத்து மடிந்தன என்று இந்த ஊழிமரணங்களுக்குப் புதைப்படிவ ஆய்வாளர்கள் விளங்கம் கொடுத்திருக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக இந்தப் பேரழிவுகளிலும் பூமி தன் தாய்மையைப் பேணியே வந்திருக்கிறது. தப்பிப் பிழைத்த உதிரி உயிரிகளில் மெல்ல மெல்லப் பரிமாணம் (Evolution) நிகழ்ந்ததில் இலட்சக்கணக்கான ஆண்டுகளில் பூமி, மீண்டும் புதிய புதிய உயிரினங்களால் அழகு பெற்றது. நகருயிர்களின் தலைவன் டைனோசோர்களின் அழிவுக்குப் பிறகு பாலூட்டிகள் ஆட்சி பெற்றிருக்கும் இன்றைய பூமியில் இதுவரையில் சுமார் 17 இலட்சம் தாவர - விலங்கு இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. ஆனால், இருப்பதில் பெரியதும் அதிக அளவில் ஆராய்ப்பட்டதுமான பாலூட்டிகளே கூட இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை. சமீபத்தில் வியட்நாம் லாவோஸ் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் பசுவை ஒத்த புதிய இனப்பாலூட்டி விலங்கொன்று கண்டறியப்பட்டுள்ளது. பூச்சிகளில் இது வரையிலும் அறியப்பட்ட சுமார் 10 இலட்சம் இனங்களைவிடவும் 8 மடங்கு அதிகமான இனங்கள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி,இன்னமும் பெயரிடப்படவேண்டிய, தெரியவர வேண்டிய 125 இலட்சம் வரையான இனங்களைப் பூமி அடர்காடுகளிலும், ஆழ்கடல்களிலும் பொத்திவைத்திருப்பதாக உயிரியல் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். விலைமதிக்க முடியாத இந்த "உயிர்ப் புதையலே " இப்போது பேரழிவின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

உண்மையில் , உயிர்கோளத்தை அழிவின் வாயில் இருந்தும் மீட்டெடுப்பது என்பது கைமீறிப்போகும் தருணத்தில்தான் இருக்கிறது. இந்தக் கட்டுரை வெளியாகி இருக்கும் இதழைப் பூரணமாகப் படித்து முடிப்பதற்குள் உலகில் ஏதாவது ஓர் இனம் பரிதாபமாகத் தன் கதையை முடித்திருக்கும் . மணித்தியாலத்துக்கு ஓர் இனம் என்ற கதியில் பூமி தன் உயிர்ப்பைப் பறி கொடுத்துக் கொண்டிருக்கிறது.இது எச்சரிப்பதற்கான மிகைப்படுத்தல் அல்ல. பல தசாப்தங்களாக உயிரியலாளர்கள் இருண்ட காடுகளின் "இண்டு இடுக்கு " களிலெல்லாங்கூட திரட்டிய தகவல்களின் முடிவாகவே இந்தப் பதைக்க வைக்கும் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த உயிரினங்கள் எதுவும் திடீரென ஒரே நாளிற் காணாமற் போய்விடுவதில்லை. எண்ணிக்கையில் படிப்படியாகக் குறையத் தொடங்கி ஒரு நிலையில் ,அழிவில் இருந்தும் இனிமேலும் தானாக மீள முடியாது என்னும் அளவுக்கு "அபாய எல்லை" க்குள் இறங்கிவிடுகிறது. இப்படித் பத்து வருடங்களில் பாதிக்குக் கீழாகவும் அழிந்து விடும் இனங்களை அல்லது வீரியத்துடன் இனம்பெருக்கக்கூடிய அங்கத்தவர்களை 250 இக்கும் குறைவாகக் கொண்டிருக்கும் இனங்களை "அழியும் இனங்கள்" (Endangered) என்று உயிரியலாளர்கள் வரையறை செய்திருக்கிறார்கள். அழியும் இனங்கள் விரைவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குச் சுருங்கி "வாழும் மரணம்" (Living dead) என்றாகி, கடைசியில் காப்பகங்களிற் கூட ஒரு பிரதிநிதியேனும் விட்டு வைக்காமல் "டோடோ" பறவையைப் போன்றோ அல்லது "பயணிப்புறா" வைப் போன்றோ கூண்டோடு அழிந்து( Extinct) விடுகின்றன.

பூமியில் இருந்து நிரத்தரமாகவே விடைபெறுவதற்குக் காத்திருக்கும் அழியும் உயிரினங்களில் சீனாவின் பண்டா கரடி , ஆபிரிக்காவின் மலைக்கொரில்லாக்கள் , இந்தியப் புலிகள் . நீலத் திமிங்கலங்கள் என்று நட்சத்திர அந்தஸ்துப் பெற்றிருக்கும் வெகு சில இனங்கள் மட்டுமே ஊடகங்களின் கவனிப்புக்கு ஆளாகிவருகின்றன. ஆனால் ஈனஸ்வரம் எழுப்பிக்கொண்டிருக்கும் இனங்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு செல்கிறது. உலக நிலை காப்பு ஒன்றியத்தின் (The world conservation union) மதிப்பீட்டின் படி பாலூட்டும் இனங்களில் நாலில் ஒரு பங்கும் , பறவைகளில் பத்தில் ஒரு பங்கும் அழியக் கூடிய அபாய நிலையை எட்டியுள்ளன. ஊர்வனவற்றில் ஐந்தில் ஒரு பங்கும் ,நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளை தேரை போன்றவற்றில் நாலில் ஒரு பங்கும் , எல்லா வகை மீன்களிலும் குறிப்பாக நல்ல தண்ணீரில் வாழ்பவை 34 விழுக்காடும் அதே போன்று அழிவின் விளிம்பில் வந்து நிற்கின்றன. இந்த விபரங்கள் எல்லாம் நன்றாக நமக்குத் தெரிந்த முள்ளந்தண்டு உயிரினங்கள் பற்றியவைதான். இன்னும் போதுமான ஆய்வுகள் செய்யப்படாத குழுக்களில் 500 வகைப் பூச்சிகள் , 400 வரையான நண்டு போன்ற மேலோடு உள்ள பிராணிகள் , 900 வகை நத்தை, சிப்பி போன்றவைகள் குறித்தும் அச்சம் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று பூமிக்குப் பசுமைப் போர்வையை வழங்கிக் கொண்டிருக்கும் பூக்கும் தாவரங்களிலும் சுமார் எட்டில் ஒரு பங்கு அழிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், பூமிக்கோள் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கும் இந்த ஏழாவது பேரூழிக்கான கால்கோள் கடந்த யுகங்களைப் போல அண்ட வெளியில் இருந்து வரவில்லை. இம்முறை பூமியின் பிந்திய பிரசவிப்பான மனிதனே பூமித்தாயின் உயிர்த்துகிலை உரியும் அவலம் நேர்ந்திருக்கிறது. விண்ணில் இருந்து பூமிக்கு வரக் கூடிய அபாயங்களை விண்ணிலேயே எதிர்கொண்டு அழிப்பதற்கு மனிதன் தயாராகிவிட்டிருக்கும் இன்றைய நிலையில் ஆபத்து அவனாலேயே என்பது முரண் நகையாக இருப்பினும் யதார்த்தம் அதுவாகத்தான் உள்ளது.

உயிர்வாழ்தலில் "உண்ணுவதும் உணவாவதும் ", " வலிந்தவை பிழைப்பதும் நலிந்தவை அழிவதும்" இயற்கையின் நியதிகளாகும் போது பரிணாமப் பாதையெங்கும் இனங்களின் மறைவும் தவிர்க்க முடியாததாகிறது. புவிச் சரிதவியற் காலம் நெடுகிலும் இனங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக ஒரு மில்லியன் வருடங்கள் வரை வாழ்ந்துள்ளன. இவற்றில் " ஒரு வருடத்துக்கு மில்லியனில் ஓர் இனம் "(Special/ million / year) என்ற கதியில் இயற்கை களையெடுப்பு நிகழ்த்தி வந்துள்ளது. கூடவே, இதே கதியிலேயே பரிணாமத்தில் புதிய இனங்களையும் பிரசவித்து வந்துள்ளது. ஆனால் , " "பழையன கழிதலும் புதியன புகுதலிலும்" பருமட்டாகவேனும் ஒரு சமநிலையைப் பேணி வந்த பூமியில் மனிதனின் வருகைக்குப் பின்னரேயே நிலைமை எதிர்மாறாகியது. இனங்களின் அழிவு வீதம் படிப்படியாக அதிகரித்து இப்போது பெரும் சூறையாடலைப்போல 1000 மடங்குகளாக எகிறியிருப்பதுடன் , புதிய உயிரினங்கள் தோன்றும் வீதமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தரையில் வாழும் வேறு எந்தப் பெரிய விலங்கைவிடவும் மனிதர்கள் தான் நூறு மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றார்கள் சுமார் 600 கோடிகள் . ஒரு பெரு வெடிப்பாக நிகழ்த்திருக்கும் இந்தச் சனத்தொகைப் பெருக்கமே இது வரை இல்லாத அளவுக்கு உயிரினப் பல்வகைமையைக் காயப்படுத்தியுள்ளது. தனி ஒரு மனித இனத்தின் தேவைகளுக்கு இன்னும் சொல்லப்போனால் அவனது பேராசைமிக்க விரய நுகர்வுக்கு உலகின் ஒட்டுமொத்த உயிரினப்பல்வகைமையுமே பலிக்கடாவாகியுள்ளது.

உயிரினப் பல்வகைமை (Bio diversity ) என்னும் சொற்றொடர் 1980 களில் அமெரிக்க அறிவியலாளர்களினால் உருவாக்கப்பட்டது. வெளிப்படையான தொனிப்பை விட இது அர்த்தப் பரிமாணங்களில் இன்னும் ஆழம் நிறைந்தது. மழைக்காடுகள் பவளப்பாறைகள் - சதுப்பு நிலங்கள்- சவான்னாப் புல்வெளிகள்- கடல் நீரேரிகள் என்று பூமியின் பல்வகைப் பட்ட சூழற்தொகுதிகளையும்,இவற்றின் கூறுகளாக இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு தூங்கு மூஞ்சிமரம்- புள்ளி மான்- வௌவால் மீன் - பறக்கும் அணில்-பாண் பூஞ்சணம் என்று பல தரப்பட்ட இனங்களையும் குறிக்கிறது. தவிரவும் , இனங்களுக்கிடையேயான பல் வகைமையைப் போல் இனத்துக்குள்ளேயும் உண்டு. உருளைக்கிழக்கில் சுமார் 3000 வகைகள் தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் மலைப்பகுதியில் பயிராகிறது.சேலம்,கிளிச்சொண்டு, அம்பலவி, அல்போன்சா என்று மா இனத்தில் சுமார் 1000 இனங்கள் உண்டு. இப்படி ஓர் இனத்தின் அங்கத்தவர்களுக்கிடையே இருக்ககூடிய மாறுபாடுகளுக்குக் காரணமான மரபணுக்களையும் சேர்த்தே உயிரினப் பல்வகைமை முழுமை பெறுகிறது. சூழற்தொகுதிகள் இனங்கள் -மரபணுக்கள் என்று உயிரனப் பல்வகைமையின் எல்லாப் படிகளிலுமே இன்று மனிதனின் பிடி அகோரமாக இறுக்கத்தொடக்கியுள்ளது.

சூழற்தொகுதிகளில் முதலிலும், அதிக அளவிலும் பாதிப்புக்கு ஆளாகியது பூமியின் உயிர்நாடியாக விளங்கும் மழைக்காடுகள் ( Rain forests) தான். பூமத்தியரேகையை ஒட்டி வெப்பமண்டல நாடுகளில் வானளாவி நிற்கும் இந்தப் பச்சை அடுக்கு வீடுகளில் தான் உலகின் அரைவாசி உயிரினங்கள் வாசம் செய்கின்றன. அதுவும் ,இவற்றில் பெரும்பாலானாவை தாம் வாழும் குறிப்பிட்ட அந்தப் பிரதேசங்களைத் தவிர வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படாத இனங்கள் (Endemic) ஆகும். தான் கொண்டிருக்கும் உயிரினங்களோடு உலகின் மீதி உயிரினங்களின் இருத்தலிலும் பங்காற்றிக்கொண்டிருக்கும் மழைக்காடுகள். வேளாண் தேவைகளுக்கும் , நகரமயமாக்கலுக்கெனவும் பெரும் அளவில் சூறையாடப்படுகின்றன. நூறு வருடங்களுக்கு முன்னாள் பூமியின் நிலப் பரப்பில் 12 விழுக்காடுகளாக இருந்த மழைக்காடுகள் இப்போது சரி பாதியளவே எஞ்சியுள்ளன. நூலிழையில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காட்டுத் துகிலும் செக்கனுக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் ( வருடத்துக்கு இங்கிலாந்தும் வேல்ஸூம் இணைந்த பரப்பளவால்) துச்சாதன மனிதனிடம் தன்னை இழந்து கொண்டிருக்கிறது.

பெரும் எண்ணிக்கையான இனங்களுக்குப் புகலிடம் அளிப்பதால் `கடலின் மழைக்காடுகள் " என்று வர்ணிக்கப்படும் "பவளப் பாறைகளும்" (Coral reefs) பாரிய அழிவைச் சந்திக்கத் தொடந்கியுள்ளன. வெப்ப வலயக் கடலின் ஆழம் குறைந்த கரையோரப் பகுதிகளில் மைல் கணக்காகப் படுத்துக் கிடக்கும் பவளப் பாறைகள் , நட்சத்திர மீன், கடல் அனிமனி, கடற் பஞ்சு என்று கடலின் இரண்டு மில்லியன் இனங்களுக்கு இனிய இல்லங்களாக விளங்குகின்றன. கடல் மீன் இனங்களிலும் கால்வாசிப் பங்கு இங்கு சஞ்சாரம் செய்கின்றன. பவளப்பாறைகள் ஜெலிமீன்களின் கூட்டத்தை சேர்ந்தவை. கல்சியம் காபனேற்றுச் சுவர் சூழ்ந்த ,இடம் பெயரமுடியாத முடவன் உயிரிகள் ஆகும். இதனால் அல்காக்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவற்றை தம்மில் வளர இடம்கொடுத்து அவற்றிடம் இருந்து உணவை பெற்று ஏறத்தாழ 195 மில்லியன் வருடங்களாகப் பூமியில் நிலை கொண்டிருக்கின்றன. ஆனால் கிறித்தேசியஸ் யுக ஊழியைக்கூடத் தாக்குப்பிடித்த இந்தப் பவளப்பாறை இனங்களினால் மனிதனின் சூழல் விரோதப் போக்குகளிலிருந்துமட்டும் தப்பிக்க முடியவில்லை. ஏற்கனவே கடலில் கலக்கும் கழிவுகள் , டைனமைற் வெடிகள் சயனைட் நஞ்சுகளைப் பயன்படுத்தும் மீன்பிடி முறைகள் ,அளவுக்கு அதிகமான மீன்பிடி , நங்கூரங்களின் காயப்படுத்தகள், கப்பற் போக்குவரத்துக்குத் தகர்க்கப்படும் நிர்ப்பந்தம் போன்றவற்றால் அவதிக்குள்ளாகி வந்த பவளப்பாறைகள் இப்போது பூமி சூடாகத் தொடங்கியதையடுத்து மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. மனிதன் மேற்கொண்டு வரும் காடழிப்பினாலும் , அவன் கரித்துக் தள்ளும் எரிபொருட்களினாலும் குவியும் கரியமில வாயு பூமியை சூடுபடுத்தி (Global warmimg) வருகிறது. இதில் கடல் நீரின் வெப்பநிலை உயர்ந்து அல்காக்களை அழித்துவிட , பவளப்பாறைகள் உணவூட்டல் இன்றி நிராதரவாக மடிய ஆரம்பித்துள்ளன. இதுவரையில் இந்து சமுத்திரப் பரப்பில் மட்டுமே ஐம்பது விழுக்காடுகளுக்கும் அதிகமான பவளப்பாறைகள் இப்படி அழி பட்டிருக்கின்றன.

ஆண்டொன்றுக்கு வெறும் 10 சத மீற்றர் அளவால் மட்டுமே வளரக்கூடிய பவளப் பாறைகளால் இப்பேரழிவிலிருந்தும் மீண்டெழுவது என்பது இயலாத ஒன்றாகும். இந்தக் கடற்காடுகளின் அழிவும் தரையில் மழைக்காடுகளின் மறைவும் இப்போதுள்ள கதியிலேயே தொடருமாயின் 2,100 ஆம் ஆண்டளவில் உலகின் உயிரினங்களில் பாதியளவு பூமியில் இருந்து நிரந்தரமாகவே காணமற்போய்விட்டிருக்கும்.

(நன்றி: தினக்குரல்)

9 comments:

Anonymous said...

மனிதன் மனிதனுக்கு மட்டுமல்ல அவன் வாழும் பூமிக்கும் அவன்தான் எதிரி.

bala said...

ஆதிபகவன் அய்யா,

நீங்க சொல்றதைக் கேட்டா ரொம்ப கவலயா இருகுங்கய்யா.என்னைக் கேட்டா நம்ம வெளியே மிதக்கும் அய்யாவைக் கூட Endangered Species ரகத்துல சேர்த்து பாதுகாக்க வேண்டும்.நம்ம ம க இ க கும்பல் செய்வாங்களா?

Anonymous said...

//மிதக்கும் அய்யாவைக் கூட Endangered Species ரகத்துல சேர்த்து பாதுகாக்க வேண்டும்.நம்ம ம க இ க கும்பல் செய்வாங்களா?//

அவர் ஓர் அழிந்த வகையைச் சார்ந்தவர். அவர் ஒரு மறு அவதாரம்.. அவர் எங்கும் மிதப்பார், எதிலும் மிதப்பார்.. ;-)

ஆதிபகவன் said...

மிதக்காதவன்,
அது என்ன ம க இ க?:))

Anonymous said...

அரசியல்வாதிங்க சில பேர் நம்மூர்லியே திரியிறாய்ங்க.
அவிங்களையும் Endangered Species ரகத்துல சேக்கனும்.

Anonymous said...

நல்லதொரு கட்டுரை இது. ஆங்காங்கே தகுந்தமாதிரி புகைப்படங்களை சேர்த்திருந்தால் அல்டிமேட் ஆக இருந்திருக்கும்...

நீங்க எழுதினீங்கன்னே நினைச்சேன்..:)))....

ம.க.இ.க -> மக்கள் கலை இலக்கிய கழகம்.

தமிழகத்தில் எளியவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளை கிராமங்கள் தோறும் நடத்தி விழிப்புணர்வை ஊட்டும் ஒரு எளிமையானவர்களை கொண்டதொரு அமைப்பு..

ஆதிக்க சக்திகளுக்கு எரிச்சலூட்டும் ஒரு அமைப்புத்தான் அது...அதுதான் பாலாவுக்கு எரிச்சல் போல.

செந்தழல்

bala said...

//அது என்ன ம க இ க?//

ஆதிபகவன் அய்யா,

ம க இ க ஒரு புரட்சிகர கட்சி.திராவிட கொள்கை + கம்யூனிஸ சித்தாந்தம் சேர்ந்த ஒரு வினோதமான கலவை சிந்தாந்தம் தான் எங்க கொள்கைன்னு சொல்லிக்குவோம்.அதனால எங்களுடைய முக்கியமான வேலைகள் கீழ் வருமாறு:
1) கோயில் சிலைகளை உடைப்பது.
2)கோயிலுக்கு வெளியே யாராவது தாத்தா பூ வித்துக்கொண்டு இருந்தால் அவங்க கை காலை உடைப்போம்
3)எம் மக்கள் கையில் மலம் கொடுப்போம்.ஆனா அவங்களை சகோதரர்களே என்று பாசத்தோடு அழைப்போம்.அதனால எம் மக்கள் எங்க கிட்டே இருந்து மலத்தை ஆசையோடு வாங்கிப்பாங்க.
4)எம் மக்கள் கிட்ட கொஞ்ச நஞ்ச காசு இருந்தா நாங்க அதை சந்தாவா வசூல் செஞ்சி,அப்பப்போ விழா நடத்தி,கட்சி காரங்களுக்கு chilli beef + சாராயம் சப்ளை செய்வோம்.
கட்சி காரங்களைத் தவிர பாக்கி எல்லார் கையிலும் மலம் தான் இருக்கணும் என்ற கொள்கையில நாங்க உறுதியாவே இருக்கிறோம்.நாங்களெல்லாம் endangering species.அசுரன் அய்யா தான் எங்க தலைவர்.சமீபத்துல தமிழ் இசை தொலைஞ்சு போயிட்டதா எங்க கிட்ட தகவல் வந்தது.அதனால எங்க அசுரன் அய்யாவே பாட்டு பாடி ஆல்பம் போட்டு,தமிழ் இசைக்கு மறு உயிர் கொடுத்தோம்.உங்களுக்கு இன்
டெரெஸ்ட் இருந்தா சொல்லுங்க.அசுரன் அய்யா கிட்ட சொல்லி,உங்க கிட்ட சந்தா வசூல் செய்து கட்சியில உறுப்பினர் ஆக்கிடலாம்.

பாலா

ஆதிபகவன் said...

நீங்க எழுதினீங்கன்னே நினைச்சேன்..:)))....

கொஞ்சநாள் போகட்டும் சரியான புள்ளி விபரங்களுடன் நானே ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

Santhosh said...

ஆதிபகவன் அய்யா,
ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க. மிகவும் உண்மையான கருத்தும் கூட.