Tuesday, December 5, 2006

பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் வருகின்றது!


இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவர இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக தகவல். அத்துடன் விடுதலைப்புலிகளை தடைசெய்யவும் உத்தேசம்!

எதை நோக்கி நகர்கிறது இலங்கை அரசு!!?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என்றால் முன்னர் தடைச்சட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில்தான் தென்னிலங்கை மிக மோசமான அழிவைச்சந்தித்தது. சமாதானத்தை நோக்கிய காலங்களின் போதுதான் இலங்கை அரசு சற்றே நிம்மதியாக மூச்சு விட்டது.

புலிகளைத்தடை செய்வது சரியா, பிழையா என்பதல்ல பிரச்சினை, தடை செய்வதன் மூலம் சமாதானத்தை விட்டு விலகிச்செல்கிறோம் என்பது தான் உண்மை.

உலகில் இன்றுவரை எந்த ஒரு ஆயுதமேந்திய போராட்டமும் எந்த ஒரு மக்களுக்கும் விடுதலை பெற்றுத் தந்ததாக சரித்திரம் இல்லை. அதே போல் எந்த ஒரு இனத்தையும் தடைச்சட்டங்களின் மூலம் அடக்கிவிடலாம் என்பதும் கனவாகவே முடியும்.

பேச்சுவார்த்தை / சமாதானம் மூலமாகவே ஒரு தேசத்தை அல்லது இனங்களுக்கிடையிலான
ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியும்.

மனித உரிமைகள் மிகவும் பாரதூரமாக மீறப்பட்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் சமாதானம் நிலவ அரசாங்கமே அதிக அக்கறை காட்டவேண்டும். அரசின் எந்த ஒரு நகர்வும் சமாதானத்தை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய ஒரு கடமை புலிகளுக்கு கிடையாது. அதற்காக நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு அரசாங்கத்திற்கு ஈடாக வளர்ந்திருக்க்கும் புலிகள், அரசிற்க்கு எதிரான தனது போராட்டத்தில் மக்களை பலிகடாவாக்கக் கூடாது. காரணம் இந்தப் போராட்டமே ம்க்களுக்காகத்தான்.

பேச்சு வார்தையின் மூலமே ஒரு தீர்வை எட்டமுடியும் என்பதில் இரு தரப்பினரும் நம்பிக்கை வைக்க வேண்டும். புலிகளுக்கும் அரசிற்க்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மிக அவசியம். ஆனால் அது துளியளவு கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

புலிகள் மட்டுமே வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் இல்லை என்று கூறும் மற்றைய இயக்கங்கள் / கட்சிகள் கூட, அல்லல்படும் தமிழர்க்கு உதவுவதைவிட புலிகளை வஞ்சம் தீர்ப்பதே தமது தலையாய கடமை என செயல்படுகின்றன.

அரசாங்கமும் தனது முந்தைய அனுபவங்களில் இருந்து எந்த ஒரு பாடமும் கற்றதாக தெரியவில்லை. ஆனால் எந்த ஒரு சராசரி சிங்களவரும் யுத்தத்தை விரும்பவில்லை.

புலிகளை தடை செய்வது மீண்டும் ஒரு மோசமான யுத்தத்திற்கே வழி வகுக்கும். அதன் மூலம் மீண்டும் முழு நாடும் யுத்தத்திற்குள் தள்ளப்படும் நிலை ஏற்படும்.


அமெரிக்க டாலர் 5.469 பில்லியன் வரவு செலவு திட்டத்தில் $ 1.665 பில்லியன் பற்றாக்குறை(2005) நிலவும்போது இந்த வருடம் $ 1.300 பில்லியன் தொகையை பாதுகாப்பு நிதிக்கு ஒதுக்கியிருப்பது கவலைக்குரியது.

மொத்த சனத்தொகையில் 92.3 % பேர் கல்வியறிவு பெற்ற இத்தேசத்தில் இப்படியோர் நிலைமை.

85,000 பேருக்கு மேல் உயிரிழந்தும், லட்சக்கணக்கானோர் அகதிகளாகவும், ஆறு லட்சம் பேர் பட்டினிச் சாவையும் எதிர் நோக்கியிருக்கும் இன்னேரத்தில் ஒரு தேசம் யுத்தத்தை நோக்கி நகர்வது துரதிஸ்டம்தான்.

"யுத்தமில்லாத ஒரு பூமி சத்தமில்லாமல் வேண்டும்"

புத்தம் சரணம் கச்சாமி .











No comments: